ஒரே பாடசாலையில் மகன் அதிபராகவும் சித்தப்பா உப அதிபராகவும் கடமை!

கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு தற்போது நடைபெற்று வரும் இடமாற்றத்திற்கு அமைய புதிய அதிபர் ஒருவர் இடமாற்றம் பெற்றுள்ளார்.

மேற்படி குறித்த பாடசாலையில் பதவி வகித்த அதிபர் திருமதி ஆர்.பத்மாவதி ரொச்சைல்ட் தோட்ட பாடசாலைக்கு இட மாற்றம் பெற்றுள்ளார்.

பிளக்போரஸ்ட் தமிழ் வித்தியாலயம் ஒரு ஆரம்ப பாடசாலையாகும். இங்கு 69 மாணவர்கள் கல்வி பயில்கின்றதுடன் அங்கு 04 ஆசிரியர்கள் கடமை புரிகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் புதிய இடமாற்ற சூத்திரத்தின் படி ஒரே குடும்பத்தை சேர்ந்த அதிபர் தரம் 111 கொண்ட மகன் அதிபராகவும், தரம் 11 கொண்ட அவரின் சிறிய தந்தை உப அதிபராகவும் இடமாற்றம் பெற்றுள்ளார்.

மலையக பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாகுறையும் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகமாக நிலவி வருவது யாவரும் அறிந்த விடயம்.

இருக்கும் கல்வி வளங்களை முறையாக பிரித்து அனைத்து தோட்ட மாணவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

இந் நிலையில் சாதாரணமாக 69 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை ஒன்றுக்கு அதிபர் தரம் மூன்றும் அதிபர் தரம் இரண்டையும் கொண்ட இருவரை நியமிப்பது எந்த அளவிற்கு பொருத்தமானது என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதிலும் அதிபர் தரம் இரண்டு உள்ள ஒருவரை உப அதிபராகவும், தரம் மூன்று உள்ளவரை அதிபராகவும் ஒரே பாடசாலையில் கடமையாற்றுவது பொருத்தமற்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நியமனங்கள் அனைத்தும் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவின் ஊடாகவே மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பாடசாலைக்கு பொறுப்பாக கம்பளை கல்வி வலயம் காணப்பட்ட போதும் எந்த ஒரு தொடர்புகளும் இல்லாமல் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கம்பளை வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருடாந்த இட மாற்றம் இடமாற்ற சபையின் ஊடாக மேற்க் கொள்ளபட வேண்டிய நிலையில், வலயத்தின் அனுமதி இன்றி சர்வதிகார போக்கில் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு அன்மை காலமாக மேற் கொண்டு வருகின்றன.

இதனால் இந்த பிரதேசத்தில் கல்வித்துறையில் ஒரு ஸ்தீரமற்ற தன்மையும் ஒரு தளம்பல் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு மேலும் அதிகமான முறைகேடான அதிபர் ஆசிரியர் இடமாற்றங்களை புஸ்ஸல்லாவ பிரதேச பாடசாலைகளில் மேற் கொண்டு வருகின்றது.

இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் பாதிப்படைவதுடன் அதிபர் ஆசிரியர்களும் மன உலைச்சல்களுக்கும் உள்ளாகி உள்ளனர்.

குறிப்பாக கல்வி அதிகாரிகள் அதிபர் ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாகவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு நன்மை தர கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அதே போல் வலய கல்வி பணிமனையின் அனுமதியையும் பாடசாலை சமூகங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவனையாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து தான் தோன்றிதனமாக நடக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

இதேவேளை இந்த நியமனத்திற்கும் தாங்களுக்கும் எந்த விதமான பொறுப்பும் இல்லை. நாங்களும் இதனை பொருத்தமானது அல்ல என்று தான் கூறுகின்றோம் எனவும் கம்பளை கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதோடு இந்த நியமனங்களை தங்களிடமும் கேட்காமல் மத்திய மாகாண கல்வி திணைக்கள தமிழ் பிரிவே வழங்கியுள்ளதாக கூறிய அவர்கள் , நாங்கள் வலயத்திற்கு பொறுப்பானவர்களாக இருக்கும் நிலையில் மாகாண கல்வி திணைக்களம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.