இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம்! நெகிழ்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர் இறந்த நிலையில், அவர் மகளான ராஜேஸ்வரியை சொந்த மகளாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ராஜேஸ்வரிக்கு திருமண வயது எட்டிய நிலையில், அவருக்கு இந்து முறையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்திற்கு இஸ்லாமிய மக்களும் இந்து பிரிவினரும் ஏராளமானோர் கலந்து கொண்டது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இது குறித்து பேசிய அப்துல்லா “10 வயதிலிருந்து ராஜேஸ்வரி எங்க கூடதான் இருக்கிறார். எனக்கு ஏற்கனவே மூன்று பசங்க இருக்காங்க.

வீட்டில் பெண் இல்லை என்ற குறையை தீர்த்தவள் ராஜேஸ்வரிதான். அவளை அந்த அளவு நேசித்தோம்.

அதே நேரத்தில் அவள் நம்பிக்கைக்கு நாங்கள் தடை தெரிவிக்கவில்லை. அனைவரும் விரும்பியபடி கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தோம். இது எங்கள் கடமை. மதம் வேறு மனுஷன் வேறு இல்லையா?” என்று புன்னகைத்தார்.

இது குறித்து புதுபெண் ராஜேஸ்வரி கூறுகையில், அப்பா- அம்மாவை விட்டு இருக்குறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்னை பிரிகிறதை நெனச்சு அம்மா அழுதுகிட்டே இருக்காங்க. என்னாலையும் அழுகையை அடக்க முடியவில்லை. என்று பகிர்ந்துள்ளார்.