இந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்

இந்தியாவில் மசாஜ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக இலங்கைப் பெண்களை கடத்தும் மனித கடத்தல் குழு தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த வகையில் இலங்கைப் பெண்கள் இருவர் இந்தியாவில் மசாஜ் நிலையங்களுக்குக்கு வேலைக்காக செல்ல காத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரு பெண்களும் 30 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் அனுராதபுரம் மற்றும் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பபடுகின்றது.

இவர்களை இந்தியாவில் மசாஜ் நிலையம் மற்றும் பார்லர்களில் வேலை செய்ய வைக்க இந்திய தரகர்கள் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய பெண்ணை மணந்த இலங்கை தரகர் ஒருவர் இரு பெண்களையும் கொழும்பில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று இந்திய நாட்டினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த பெண்கள் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று இரத்த மாதிரி பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு விமான டிக்கட் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இந்தியா செல்வதற்காக விமான நிலைய முனையத்திற்கு வந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நிலையில் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

இவர்களை விசாரித்த பின்னர், இந்த மோசடியை ஏற்பாடு செய்த இலங்கை தரகர் மற்றும் அவருக்கு உதவிய பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.