கழிவறைக்குள் விழுந்த சாவி.. எடுக்க முயன்ற நபருக்கு நேர்ந்த அசம்பாவிதம் .. கதறிய உறவினர்கள்..!

கழிவறைக்குள் சாவி விழுந்ததால் அதை எடுக்க முயன்றபோது நபர் ஒருவருக்கு கை சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் மணிமாறன் (29). இவர் உறவினருடன் காரில் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது பெத்தானியாபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்கில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த கார் சாவி எதிர்பாராதவிதமாக கழிவறைக்குள் விழுந்துள்ளது.

இதனால், பதட்டமடைந்த மணிமாறன் உடனே கழிவறை கோப்பைக்குள் கையை விட்டு கார் சாவியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரின் கை கழிவறைக்குள் சிக்கியுள்ளது.

கையை எடுக்க முடியாமல் திணறி வந்ததால், மணிமாறன் சத்தம் போட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மணிமாறனின் கையை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் கையை வெளியே எடுக்க முடியவில்லை.

இதனையடுத்து, தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுத்தியலால் கழிவறை கோப்பையை உடைத்தனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர். இந்த போரட்டத்தில் மயக்கமடைந்த மணிமாறனுக்கு தீயணைப்பு வீரர்கள் முதலுதவி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.