புலிகளை வைத்து பிழைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வேவை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிலாஷைகள் அந்த அரசியல்வாதிகளின் சித்தாந்தத்திலிருந்து வேறுபட்டவை என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வாறான பிரிவினைவாத சித்தாந்தத்தை தோற்கடிப்பதற்கான சவால் இன்னும் தமக்கு உள்ளது என்றும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புலிகளினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் ஒரு தனி நாட்டை விரும்பவில்லை, ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வை விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் இராணுவத்தினரின் பங்களிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன சாம்பியா நாட்டின் இராணுவத் தளபதிக்கு விளக்கியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.