வவுனியா – ஓமந்தை வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட போது திட்டமிட்ட வகையில் பேருந்து மற்றும் வானுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த 5 பேரும் விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்தவர்கள் எனவும் அவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தற்போது வெள்ளவத்தையில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடலங்கள் பலாலி வீதியிலுள்ள அவர்களது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.






