ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்று அதிரடி அறிவிப்பு!

ஜெனீவா பொறுப்பு கூறும் தீர்மானத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக இலங்கை விலகுவதற்கான காரணத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவிக்கவுள்ளார்.

கடந்த ஆட்சியில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கையின் பொறுப்பு கூறும் விவகார தீர்மானத்திற்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த தீர்மானத்தில் இருந்து விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று உரையாற்றவுள்ளார்.

இதற்காக அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அவரது தூதுக் குழுவினர் நேற்று பிற்பகல் ஜெனீவாவை சென்றடைந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்றைய தினம் அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையில், 40/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகும் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும், 2019ஆம் ஆண்டின் 40/1 தீர்மானம் மற்றும் அதனை வலியுறுத்தி முன்னர் நிறைவேற்றப்பட்ட 2015ஆம் ஆண்டின் 30/1 மற்றும் 2017ஆம் ஆண்டின் 34/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகருக்கு நாளைய தினம் இதனை வாய்மொழி மூலம் அறிவிக்க உள்ளதுடன், நாளை மறு நாள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரையும் அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திக்கவுள்ளார்.

ஜெனிவா சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசிங்ஹ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயனத் கொலம்பகே, பிரதி மன்றாடியர் நாயகம் நெரின் புள்ளே, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பிரிவுக்கான வெளியுறவு அமைச்சின் இயக்குநர் நாயகம் எம்.ஆர்.கே லீனகல உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.