அரச சேவை என்பது வேலைவாய்ப்பு அல்ல..!! ஜனாதிபதி கோட்டாபய சுட்டிக்காட்டு..!

அரச சேவையென்பது வேலைவாய்ப்பு அல்ல எனவும் மக்களுக்கான சேவையே என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரசாங்க நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றதுஇதன்போது சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி கோட்டாபய, ஒவ்வொரு நாளும் சம்பள உயர்வு, பதவி உயர்வு கோரி பல்வேறு விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய கோரிக்கைகள் அனைத்துக்கும் எம்மால் தீர்வை முன்வைக்க முடியும். அது எப்போதென்றால் அரச வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவேயாகும்.

அத்துடன் அரச வருவாயை அதிகரிப்பதைப்போன்று கழிவுகளை குறைத்தல் மற்றும் ஊழலை ஒழித்தல் ஆகியவற்றையும் பொது சேவையின் ஊடாகவே செயற்படுத்த முடியும்.

மேலும், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பொது சேவையை திறம்பட செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

எனவே, சுயாதீன ஆணைக்குழுக்களில் மற்றும் அரச சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.