கொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்…யாழில் வீதிக்கு இறங்கிய தந்தை!

கடந்த 2017 ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகள் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு நீதி வேண்டும் எனவும் கோரி தந்தை ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்திக்கு அருகில் இன்று காலை முதல் அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

வைத்தியரொருவரும் மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும் கூறிய அவர் தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மகளின் புகைப்படம் மற்றும் மகளின் மரணத்துக்கு நீதி வேண்டுமென எழுதப்பட்ட பதாகையினையும் தமது கைகளில் தாங்கியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

திடீர் மனநலப் பாதிப்புக்குள்ளான தனது மகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு ஒரு வைத்தியரும் மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து மகளை வ ன் பு ண ர் வு க் குட்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் உண்மை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக எனது மகளின் உடலுக்கு ஊசியேற்றி கொலை செய்ததாக கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பல நாட்களின் பின்னரே இந்த விடயம் தமக்குத் தெரிய வந்தது.

மகளின் உயிரற்ற உடலை எம்மிடம் கையளிக்கும் போது அவரது உடலிலிருந்து சிறுநீரகம் உள்ளிட்ட பகுதிகள் தங்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனது மகளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடந்த கொடுமைகள் தொடர்பில் நான் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தேன்.

எனினும், இதுவரை தன் மகளின் கொலைக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் தன் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தான் ஓயமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.