தாயொருவருக்கு தமது குழந்தை தேவையில்லையெனில் அந்த குழந்தையை பொறுப்பேற்கும் வகையிலான புதிய திட்டமொன்று இலங்கையில் கொண்டுவரப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த குழந்தைகளை பொறுப்பேற்கும் வகையிலான ஒன்பது மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்படவுள்ளது.
கடந்த சில காலங்களாக நாட்டின் பல பகுதிகளில் பிறந்து சில நாட்களேயான பல சிசுக்கள் சடலங்களாகவும், உயிருடனும் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தன.
அத்துடன் சடலங்களாக மீட்கப்பட்ட சில குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையிலேயே குறித்த புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாயொருவருக்கு தமது குழந்தை தேவையில்லையெனில் அவர் தனது குழந்தையை அமைக்கப்படவுள்ள மத்திய நிலைகளில் ஒப்படைக்க முடியும்.
குழந்தைகளை மத்திய நிலையங்களில் ஒப்படைக்கும் போது குழந்தையின் பெற்றோரிடம் எந்த காரணங்களும் வினவப்பட மாட்டாது.
குழந்தைகள் வளர்ந்தவுடன், அவர்களை சிறுவர் நிலையங்களுக்கு அல்லது குழந்தைகளை தத்தெடுப்போருக்கு சட்டரீதியாக ஒப்படைப்பதே நோக்கம்.
அதேவேளை பிறந்தது முதல் ஒரு வயது வரையான குழந்தைகளை மாத்திரமே குறித்த மத்திய நிலையங்களில் ஒப்படைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.






