யாழில் கடமையை செய்த பெண் உயர் அதிகாரிக்கு மிரட்டல்!

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வலி.தெற்கு பிரதேசசபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேசசபையின் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ள நிலையில் குறித்த கட்டிடத்திற்கு உரிய அனுமதியை பெறுமாறு பிரதேசசபையின் உபஅலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொறுப்பதிகாரி கட்டிட உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எனினும் இரண்டு மூன்று தடவைகள் அவர் அறிவுறுத்தல் வழங்கியும் இன்றுவரை கட்டிடத்திற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை.

இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் உபஅலுவலக பொறுப்பதிகாரி குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்துவற்கன அனுமதியை சபையிடம் கோரியுள்ளார்.

அவர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தவிசாளர் பிரதேசசபையின் உரிய அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ளதால் குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையிலேயே வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு நேற்று முன்தினம் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடுவில் பகுதியில் அமைந்துள்ள உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரிக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் நீங்கள் தேவையில்லாத விடயங்களில் தலையிட வேண்டாம் என்றும், அவ்வாறு தலையிட்டால் முன்னர் இருந்த பொறுப்பதிகாரிக்கு நடந்ததே உங்களுக்கும் நடக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு எதிராக தாம் நடவடிக்கை எடுக்க முற்படும்போது இவ்வாறான மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.