கொரோனா வைரஸை விரட்டியடித்த ஜனாதிபதி கோட்டாபய!

கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு விசேட செயலணிக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக பிராந்தியத்தில் கொரோனா வைரசிற்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடாக இலங்கை மாறியுள்ளது.

தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்டறியுமாறும் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. அந்நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களை 14 நாட்களுக்கு நோய்த்தொற்று தடைகாப்பு செய்ய வேண்டுமென்று செயலணி பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயமற்ற நாடாக இலங்கையை தொடர்ந்தும் வைத்திருக்க முடியுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்போது முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு வைத்தியசாலைகளில் சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் வெற்றிகரமாக நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு இலங்கையரும் நாட்டிற்குள் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமானால் அதனை மறைத்துக்கொண்டிருக்காது சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நோய்த் தொற்றுவதை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களின் வாயிலாக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தால் அதற்குத் தேவையான இடங்கள், வளவாளர்கள், வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.