ரணிலின் நேர்த்தியான காய்நகர்தல்! மஹிந்தவை காப்பாற்றி, மைத்திரியை ஏமாற்றிய அரசியல் நகர்வு

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திருப்பங்களுடன் வெளிவருவதால் கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அரசியல் ரீதியாக அநாதரவாக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

தாமரை சின்னத்தில் முதன்முறையாக தேர்தல் ஒன்றை சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வாக்கு வேட்டையில் முன்னிலையில் உள்ளது.

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் சுமார் 42 சதவீத வாக்குகளை மஹிந்த தலைமையிலான கட்சி பெற்றுள்ளது.

மஹிந்த தலைமையிலான கட்சி முன்னிலை வகிக்கும் அதேவேளை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் பாரிய பின்னடைவை சந்தித்து மூன்றாமிடத்தில் உள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாரிய வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

மஹிந்த – ரணிலின் இரகசிய நட்பு உடன்படிக்கை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவடையச் செய்து பலவீனப்படுத்தும் ரணிலின் காய்நகர்த்தல்களே பிரதான காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் இரு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் கீழான ஆட்சியை அமைக்க ரணில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹிந்தவின் வெற்றி ரணிலுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக மாறியுள்ளது.

ரணில் நேர்ந்தியான காய்நகர்த்தல்கள் மைத்திரியை மிகவும் பலவீனமடையச் செய்துள்ளதாகவே வெளியான தேர்தல் பெறுபேறுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சுதந்திர கட்சிக்குள் மீண்டும் பாரிய பிளவுகள் ஏற்படும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தோல்வியின் காரணமாக ஏமாற்றமடைந்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிரந்தரமாக பிளவடையும் நிலையில், தேர்தல் ஒன்றை சந்திக்கும் போது வாக்கு வங்கிகள் பாரிய சரிவினை எதிர்கொள்ளும்.

இந்த வீழ்ச்சி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கும்.

ரணில், மஹிந்த அரசியல் மேசைகளில் காரசாரமாக பேசிக்கொண்டாலும், மறுபுறத்தில் நல்ல நண்பர்களாகவே உள்ளனர்.

மஹிந்த செயற்பாட்டு அரசியல் இருக்கும் வரையில் ரணிலின் பிரதமர் கனவு என்றும் யதார்த்தமானதாகவே இருக்கும்.

மைத்திரியை ஓரம்கட்டி விட்டு ரணில் தலைமையிலான ஆட்சி விரைவில் அமைவதற்கான வாய்ப்புகள் விரைவில் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.