பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியான தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தை மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பொதுமக்களுக்கு பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். பார்வையிட வருபவர்களுக்கு ஒளிப்படம் எடுக்கவும் முடியும்.
இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் அனுப்பிவைக்கப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) எனும் பெயருக்கு வேண்டுகோள் கடிதமொன்றை 011-2441685 என்ற பக்ஸ் இலக்கத்திற்கு அனுப்பிவைப்பதன் ஊடாக அல்லது 011-2354354 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பார்வையிடுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.
பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதியானது இலங்கை அரசியல் வரலாற்றில் தீர்மானமிக்க யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பழைய கட்டட நிர்மாண முறைமைகளில் ஐந்தில் ஒன்றான “அயானியானு முறைமைக்கு” ஏற்ப 82 ஆண்டுகளுக்கு முன் இது நிர்மாணிக்கப்பட்டது.
இதன் முன் தோற்றம் எதென்சில் உள்ள எக்ரோபொலிஷ் மலையில் “எதினா” என்ற கிரேக்க தேவதைக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதான தேவாலயமான ”பாதினன்” கட்டடத் தொகுதிக்கு ஒத்ததாக காணப்படுகின்றது.
ஹேபட் ஸ்டென்லி ஆளுநர் மூலம் 1930 ஜனவரி மாதம் 29ஆம் திகதி அரசியலமைப்பு சபையாக இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. அரசியலமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் சட்டத்துறையில் பின்னர் இடம்பெற்ற பெயர் மாற்றத்துடன் இது அரச மந்திரிகள் சபை (1931 -1947) உப மந்திரி சபை (1947 – 1972) தேசிய அரச சபை (1972 – 1978) மற்றும் இலங்கை நாடாளுமன்றம் (1978 – 1982) என்ற பெயர்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்றம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இப்புராதன கட்டடம் 1983 செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகமாக பெயரிடப்பட்டது- என்றுள்ளது.






