நள்ளிரவில் நடந்த சண்டை!… தூங்கிக் கொண்டிருந்த தாயை கொன்ற மகன்

தமிழகத்தில் தன்னிடம் அனுமதி பெறாமல் நிலத்தை விற்ற தாயை அடித்தே கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி மகாலட்சுமி(வயது 43).

லொறி ஓட்டுநரான செல்வம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார், மகாலட்சுமி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவர்களது மகனான சதீஷ்குமார், கேரளாவில் வேலை செய்து வந்துள்ளார்.

மகாலட்சுமிக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது, இதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்த சதீசிடம் இதுபற்றி பேசியுள்ளார், இதை கேட்ட சதீசுக்கு கோபம் வந்துள்ளது.

நான் அந்த நிலத்தை நம்பி தான் இருந்தேன், என்னை கேட்காமல் எதற்காக விற்றாய்? என சண்டையிட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று இரவும் சண்டை நீடித்துள்ளது, கோபமாக வெளியில் கிளம்பி சென்ற சதீஷ், சனிக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது உறங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமியை கட்டையால் சரமாரியாக தாக்க, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் சதீஷ் சரணடைந்தார், இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.