தமிழக முகாமில் இலங்கை பெண் ஒருவரின் விபரீத முடிவு!

தமிழகத்தில், திருமணமான இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமில் வசிப்பவர் ஜெயரூபா. இவரது மகள் சுமித்திரா (28).

சுமித்திராவுக்கும் அதே முகாமைச் சேர்ந்த பத்தி நாதன் (33) என்பவருக்கும் திருணமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக தனது கணவனை விட்டு பிரிந்து, தனது தாய் ஜெயரூபா வீட்டில் குழந்தைகளோடு சுமித்திரா வசித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த 21ஆம் திகதி சுமித்திரா தனது தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானதை அடுத்து அவரை தேடியபோது, , சுமித்திரா, கவரைப்பேட்டையில் உள்ள ஒருவருடன் வசித்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கடந்த 13ம் திகதி கவரைப்பேட்டைக்கு சென்ற ஜெயரூபா, தனது மகள் சுமித்திராவை அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்ததுடன், கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக தாய் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த சுமித்திரா, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சுமித்திராவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்து சுமித்திராவின் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அதன் பின்னர், உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிகபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் நேற்று உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.