கொரோனா வைரஸ் தாக்கம்! நாட்டின் நிலை தொடர்பில் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் காரணமாக ஒருபோதும் நாட்டை முடக்கமாட்டேன். பொருளாதாரம், சமூக ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவரும் பின்னர் பொறுப்பு கூற மாட்டார்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களை பாதுகாக்க முப்படையினரும், சுகாதார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து 10 ஆம் திகதி வரையில் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து வந்த மூவாயிரம் பேரில் 1500 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தேசிய பிரச்சினையினை கருத்திற் கொண்டு காலத்தை வீணடிக்காமல் சுயமாகவே வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையினை செய்துகொள்ள முன்வந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தடையேற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் .

இந்நியாவிற்கு மதயாத்திரை சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டு வருதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமர், இராணுவத்தளபதி, பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், சுகாதார அமைச்சர்,மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், மற்றும் தொழிற்துறை வல்லுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்ட தனது தீர்மானங்களை அறிவித்தார்.