பல ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த குழந்தை… நன்றி செலுத்த கோவிலுக்கு சென்ற போது உயிரிழந்த பரிதாபம்

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த குழந்தைக்கு ஆண் குழந்தை பிறந்து 5மாதமான நிலையில் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பொழுது உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் லால்பேட் கிராமத்தில் வசித்துவரும் தம்பதிகள் கார் ஓட்டுனர் அமித் ஷா (36) மற்றும் மனைவி பிரியங்கா (30). பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்ததால் தனக்கு குழந்தை பிறந்தால் ராமேஸ்வரம் கோவிலுக்கு குழந்தையுடன் வருவதாக வேண்டியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரியங்காவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆதலால் குழந்தையை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் ராமேஷ்வரம் கோவிலுக்கு விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

இரவு நேரத்தில் குழந்தை அழுததும், அதன் அழுகையை நிறுத்த தாய்ப்பால் கொடுத்துள்ளார். தூங்கிக்கொண்டே பிரியங்கா பாலூட்டிய நிலையில் குழந்தை மூச்சுத்திணறி கஷ்டப்பட்டது தெரியாமல் இருந்துள்ளார்.

பின்பு எப்பொழுதும் போல் பயணம் செய்த தம்பதிகள் காலையில் ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த பின்பு தான் குழந்தையை நன்கு அவதானித்துள்ளனர். அசைவற்று கிடந்த குழந்தையை உடனே தூக்கிக்கொண்டு அருகிலிருந்து மருத்துவமனையில் பரிசோதிக்கையில், குழந்தை ஏற்கெனவே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனைக் கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். பின்பு கும்பகோணம் அருகே உள்ள ஒரு சுடுகாட்டில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பொலிசாரின் உதவியுடன் அடக்கம் செய்துள்ளனர்.

தனது கோரிக்கையை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி சொல்ல வந்த குடும்பத்தினர் தனது குழந்தையை இழந்து ஊருக்கு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.