ஊடரங்கு நீடிப்பது தொடர்பில் ஞாயிறன்று அறிவிக்கப்படும்- ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து 22ஆம் திகதி மக்களுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில்,

நாட்டில் உருவாகியுள்ள நிலமைகளுக்கு மத்தியில் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியை பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக பேருந்து மற்றும் தொடருந்து சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பேணுவதற்காக பேருந்துகளும் தொடருந்துகளும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்களை சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு போதுமானளவு அரசாங்கம் விநியோகித்துள்ளது.

எனவே மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் அவற்றை விநியோகிக்குமாறு அந்த விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.