அனுராதபுரம் சிறைக்குள் வன்முறை – அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

அனுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளமையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சியில் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதையடுத்து அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது.

அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கு பாதுகாப்பு இல்லையென சிறைக்கூடங்களை தகர்த்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சுமார் 900 கைதிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வானத்தை நோக்கி அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தினால் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய தகவலின்படி அதிரடி படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.