கொரோனாவுக்காக யாழில் களமிறங்கிய சிறப்பு அதிரடிப் படையினர் – கிருமிநாசினி விசிறல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்றுநீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணியில் களமிறங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.