இலங்கையில் கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நபர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக குணமடைந்து, வீடு திரும்பிய ஜயந்த ரணசிங்க என்பவர் கொரொனா வைரஸால் தான் பெற்ற தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 14 நாட்களாக அங்கொட IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது, எனது தொழில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிக்காட்டுவதாகும். அதற்கமைய நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளுடன் பயணம் மேற்கொண்டேன்.

இதன் போது எனது தொண்டையில் சிறிய வலி ஒன்றை உணர்ந்தேன். அதன் போது தம்புள்ளையில் ஒரு தனியார் வைத்தியரிடம் சிகிச்சை பெற்றேன். சளி காரணமாக ஏற்படும் கட்டி தொண்டையில் ஏற்பட்டுள்ளதென வைத்தியர் கூறினார். அன்று வைத்தியர் வழங்கிய மருந்தை பெற்றுக் கொண்டு சிகிரியாவுக்கு பயணம் மேற்கொண்டோம்.

அதற்கு அடுத்த நாள் கண்டி நோக்கி சென்றோம். அன்றைய தினம் காலை உடலில் பிரச்சினைகள் ஒன்றும் இல்லாமல் இருந்தது. எனினும் மாலையில் உடல் நிலையில் குறைப்பாடுகள் ஏற்பட்டது. வைத்தியர் கொடுத்த மருந்தை உட்கொண்டும் காய்ச்சல் குறையவில்லை.

உடல் வலி ஏற்பட்டது. சூரிய ஓளியிலேயே இருக்க வேண்டிய அவசியம் காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல காய்ச்சல் அதிகரித்தது. அந்த சந்தர்ப்பத்தில் நண்பருக்கு (சாரதி) அறிவித்து விட்டு கொழும்பு சென்றேன்.

அதற்கமைய நான் எனது தனிப்பட்ட வைத்தியரை சந்தித்தேன். அங்கு அவர் உடனடியாக அங்கொட வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறிதை அடுத்து கடந்த 10ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு தான் எனக்கு கொடிய நோயான கொரோனா தொற்றியுள்ளமை தெரியவந்தது.

உண்மையாகவே அந்த நேரத்தில் எனக்கு மரண பயம் ஏற்படவில்லை என கூறினால் அது பொய்யாகிவிடும். எனினும் எனக்கு மதத்தின் மீது நம்பிக்கை அதிகம். எனக்கு நன்மையே நடக்கும் என எண்ணின்னேன். வைத்தியசாலையில் வழங்கிய சிகிச்சைகளுக்கமைய நாளுக்கு நாள் நான் குணமடைவதனை உணர்ந்தேன்.

வைத்தியசாலையின் இயக்குனர் ஹசித அத்தநாயக்க வழங்கிய ஆலோசனையின் கீழ் வழங்கப்பட்ட சிகிச்சை மூலம் நான் நன்கு குணமடைந்தேன். நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி இந்த சிகிச்சை எனக்கு வழங்கப்பட்டது.

உண்மையாகவே சிகிச்சை முறை அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த நோய் தொற்றிய போது வாழ்வுக்கும் சாவுக்கு இடையில் இந்த வைத்தியசாலையின் சிகிச்சை முறையின் வெற்றியே எனக்கு நம்பிக்கை கொடுத்தது.

நான் கடந்த 12 வருடங்களாக சக்கரை நோய்க்கு சிகிச்சை பெறுவதனால், நான் குணமடைய சற்று தாமதம் ஏற்பட்டது. அப்படி இல்லை என்றால் நான் இதற்கு முன்னரே குணமடைந்திருப்னே்.

வைத்தியசாலையின் தனி அறையில் தங்க வைத்தார்கள். அனைத்து வசதிகளும் அங்கு உண்டு. நோய் தொற்றியமை உறுதி செய்யப்பட்ட பின்னர் எனது அறை மாற்றப்பட்டது. பொதுவான உணவுகள் வழங்கப்பட்டது. அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

நான் வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் எனது மகனின் கல்வி கற்கும் பாடசாலையில் சில சம்பவங்கள் ஏற்பட்டது. அவை குறித்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனினும் இந்த நேரத்தில் எனது அயலவர்கள் மனைவி பிள்ளைகளை தனிமைப்படுத்தாமல் அவர்களை அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.

அத்துடன் பாதுகாப்பு பிரிவு, சுகாதார பிரிவு, சிவில் அமைப்பு மற்றும் மத தலைவர்கள் எனது குடும்பத்தினருக்கு வழங்கிய உதவிகளை மதிப்பிடவே முடியாது. மிகவும் கௌரவத்துடன் அவற்றினை நினைவு கூறுகின்றேன்.

அத்துடன் இதுவரையில் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயாக இது உள்ள போதிலும் அதனை குணப்படுத்தும் திறன் எங்கள் சுகாதார பிரிவிடம் உள்ளது.

இதனால் இந்த கொடிய வைரஸ் அனுபவம் கொண்ட நான் நாட்டு மக்களிடம் கூற விரும்புவது, இந்த நோய் தொற்றினால் அச்சமடைய வேண்டாம், சுகாதார பிரிவின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள் என்பதே ஆகும்.

இது குணப்படுத்த கூடிய நோயாகும். எனினும் அவதானம் இல்லாமல் இருந்தால் உயிரை இழக்க நேரிடும்” எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.