யாழில் ஊரடங்கு சட்டம் தொடர இதுவே காரணம்! மாவட்ட அரச அதிபரின் விசேட கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைய தினம் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திலே சனச்செறிவு அதிகமாக காணப்படுவதும், அதேவேளை கடந்த ஊரடங்கு சட்ட தளர்வின் போது மக்கள் அதிகமாக கூடியதும் அதேநேரத்திலே தற்போது கூட சில இடங்களில் பொது மக்கள் அதிகமாக கூடி வருவதும் இதற்கான காரணமாகும்.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி தனிமைப்படுத்தலை தொடர்வது, அதே நேரத்திலே சமூக இடைவெளியை பேணுவது என்பதன் அடிப்படையில் நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.