கொரோனாவால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இலங்கைத் தமிழர்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ள செய்தி வெளிவந்த நிலையில் தற்போது மற்றுமொரு மரணமும் பதிவாகி உள்ளது.

அந்த வகையில் பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கையில்,

பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருந்ததாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர்கூறினார்.

மேலும், சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்றைய தினமும் இத்தாலியின் மெசினோ(miseno) நகரில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

எனினும் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.