காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரான அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் (வயது – 34) என்பவரது வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் யாரும் காயமடையாத போதும், வீட்டிலுள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.