உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு ரோபோக்களின் உதவியுடன் சிகிச்சைகளை அளிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புதிய திட்டம் வெற்றியளித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் அட்லஸ் பொறியியலாளர் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோக்களின் செயற்பாடுகளை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கண்காணித்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

நோயாளர்களுக்கு மருத்து வகைகளை கொண்டு செல்லுதல், உணவுகளை கொண்டு செல்லுதல், சிகிச்சைகளுக்கு உதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை குறித்த ரோபோக்கள் மூலம் முன்னெடுத்துள்ளன.

இதன்படி, ரோபோக்களை கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட பரிச்சார்த்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியர்களுக்கும், நோயாளர்களுக்கும் இடையில் ரோபோக்களை கொண்டு மேற்கொள்ளும் ஆரம்பக் கட்ட நடவடிக்கை ஹோமாகம வைத்தியசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் 25 ரோபோக்களை இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பிலான வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார்.