சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?

152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை காண அங்கு குவிந்த ஏராளமான மக்கள் சந்திர கிரகணத்தை கண்டுமகிழ்ந்தனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்த தருணத்தில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது. அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை.
மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே அவை ஏலியன்களின் பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.