யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் புதனன்று ஊரடங்கு தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்கள; தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அன்று பிற்பகல் ஒரு மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 24ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன், கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் மணிக்கு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. அந்த 6 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைக்கு வந்த ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு மீளவும் பிற்பகல் ஒரு மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று, மார்ச் (30) பிற்பகல் 2.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 01, புதன் காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கோரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசு கோரிகின்றது.

கண்டி மாவட்டத்தில் அகுரணை
களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன. எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.