திருவிழா நிதியில் கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கியது சரசாலை காளி கோவில்

தென்மராட்சியில் சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு இன்று இடம்பெற்றுள்ளது.

சரசாலையில் அமைந்துள்ள காளி கோவிலின் வருடாந்த மணவாளக்கோல திருவிழா வழமைபோல இன்று சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகி இருந்தது.

இந்தத்திருவிழாவிற்கென விழா உபயகாரர்கள், அன்னதான உபயகாரர்கள் மற்றும் ஆலய அடியவர்களால் சுமார் ஒரு லட்சம் ரூபா காளி கோவில் அறப்பணி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாட்டின் தற்போதைய நிலமையினை கருத்திற் கொண்ட ஆலய அறப்பணி சபையினர் மணவாளக்கோல திருவிழாவினை நிறுத்தி அந்நிதிமூலம் தமது சரசாலை கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க தீர்மானித்தனர்.

இதன்படி படையினரின் ஒத்துழைப்புடன் இன்று மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தனர்.

காளி கோவில் அறப்பணி சபையின் இந்த மனிதாபிமான செயற்பாட்டை படையினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.