ஒரே நாளில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை உயர்வு.. திணறி வரும் இத்தாலி அமெரிக்கா..!

சீனாவின் வூகானில், கொரோனா வைரஸ் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வந்தாலும் தற்போது வூகான் மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பி போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் ஒரு சில நாடுகளில் மட்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக உலகிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்கா தான் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க அரசும் அமெரிக்கர்களும் கொரோனாவை எதிர்த்து போரிட முடியாமல் திணறி வருகின்றனர்

இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 18,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 255 பேர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,148 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 163,479 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் 24 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால், கொரோனாவின் தாக்கம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் கோரத்தாண்டவம் ஆடி வருவது உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் ஒரு நாளுக்கு 800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.