கொரோனா வைரஸ் தொற்று! கொழும்பு – வெள்ளவத்தையில் சீல் வைக்கப்பட்ட வீடு

இலங்கையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்த இருவரை தனிமைப்படுத்தல் நிலையம் அல்லது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதன் பின்னர் குறித்த வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த இருவரும் அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த இருவரையும் மருத்துவ குழுவினர் அழைத்து சென்றுள்ளர்.

இதனையடுத்து, வீடு முழுவதும் கிருமி நீக்கம் தெளிக்கப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்ட இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதனிடையே, மார்ச் 16ம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யதாவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, நாளை வரை பதிவு செய்துகொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில், இது வரையில், 142 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.–