ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அபாயம் கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் 2 மணிக்கு மீண்டும் அமுல்செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நோக்கத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளின் சீரான செயற்பாட்டை உறுதிசெய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளை தவறாக பயன்படுத்துபவர்கள் சட்டத்தின் படி கடுமையாகக் கையாளப்படுவார்கள்.

கொரோனா பரவலை தொடர்ந்து, நாட்டு மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் ஒரே நோக்கமாகும்.

இந்நிலையில், வழிகாட்டுதல்களை ஒரு பொறுப்பான முறையில் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.