கோரோனா பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் – வீடியோக்களைப் பார்வையிடுவது ஆபத்து; மருத்துவர் சத்தியமூர்த்தி அறிவுரை

அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்த நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

மன உளைச்சல், பசி, தூக்கம் என்பவற்றை பாதிக்கின்றது. உளநல ஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது.

தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மனஉளைச்சலுக்குள்ளாகி தம்நோய் எதிர்க்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மனஉளைச்சலுக்குள்ளாக்கி நோய் எதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளை பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆகவே தேவையற்ற செய்திகளையும், காணொலிகளையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒரு சில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் – என்றார்.