ஊரடங்கு உத்தரவு குறித்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் (COVID-19) அச்சுறுத்தல் நீங்கிய பின்னரே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கியலேயே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த வாரம் முழுமையாக முடக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

இவ்வாறான வதந்திகள் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்ச மனநிலையை உருவாக்கும் நோக்கில் பரப்பப்பட்டதாகவும், எனினும், இதுபோன்ற எந்த முடிவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஆதரவுடன் சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினர் கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க முடிந்தவுடன், ஊரடங்கு உத்தரவை படிப்படியாக அகற்ற முடியும், என அவர் மேலும் கூறியுள்ளார்.