இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிக்கும் அபாயம்

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப்பீட கணக்கியல் மாதிரியின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகனின் எண்ணிக்கை விரைவில் 1400 ஆக உயரக்கூடும். இதனை எதிர்கொள்ள இலவச சுகாதார சேவைகள் தயராகவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்;

இந்த கணக்கியல் மாதிரியின் அடிப்படையிலேயே நேற்று ஏப்ரல் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளிகனின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்திருந்தது. எனினும் கணக்கியல் மாதிரியை விட தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கணக்கியல் மாதிரியின்படி ஏப்ரல் 7ஆம் திகதி தொற்றாளர்களின் தொகை 163ஆக இருக்கும். ஏப்ரல் 17ஆம் திகதி 340ஆக உயரும் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

இந்நிலையில் குறித்த கணக்கியல் மாதிரி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மனோஜ் கிருஷாந்த, பேராசிரியர் நிசாந்த பெரேரா ஆகியோரால் இரண்டு கிழமைக்கு முன்னாள் தயாரிக்கப்பட்டது.

இதேவேளை இலங்கையில் கொரோன வைரஸ் பரவலைப் பொறுத்தவரையில் தற்போது மூன்றாவது கட்டத்தின் ஏ பிரிவில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது வீடு, குழுமம் என்ற அடிப்படையிலேயே தற்போது பரவி வருகிறது. எனினும் இதனை 3 பி என்ற சிறிய குழுமம் மற்றும் 4ஆம் பிரிவான சமூக தரத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது.

இந்தநிலையில் தற்போது இலங்கையில் 2 ஆயிரம் கொரோனவைரஸ் தொற்றாளர்களை பராமரிக்கும் திறன் உள்ளது.

எனினும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது போனால் அது 3 ஆயிரம் தொற்றாளர்களாக மாறும் என்று மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி அலுத்கே தெரிவித்துள்ளார்.