ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா சவாலை வெற்றிகொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தி பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனா தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்த அவர், இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கமைய ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய மட்டத்தில் நாடுத்தழுவிய ரீதியாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் அனைவரும் ஈடுபட பயிர்ச்செய்கைக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.