ஆவாவின் பிறந்தநாள் கொண்டாடிய வீடு இராணுவத்தினால் சுற்றிவளைப்பு; 3 பேர் கைது – பலர் தப்பிஓட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது நண்பர்களால் இணைந்து மல்லாகத்தில் உள்ள வீடொன்றில் இன்று நடத்தப்பட்டது. அதுதொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.

அதன்போதே 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வினோதன் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலர் இராணுவத்தினரின் வருகையறிந்து அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.