அண்மையில் கனடாவில் உயிரிழந்த கமலக்கண்ணனுக்கு உண்மையில் நடந்தது என்ன – வெளிவந்த ஆதாரம்

கனடாவில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை ரொரன்றோ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி மூலம் பதிவான காணொளி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவில் 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் என்பவர் இன்னொருவரின் தாக்குதலில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் அவர் அடித்துக்கொலை செய்யப்படவில்லை என்பதோடு தள்ளிவிடப்பட்டநிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார் என காணொளி வெளிவந்துள்ளது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ள நிலையில், கொலையாளி அவரை கீழே தள்ளி விட்டமையினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக காணொளி மூலம் தெரிய வருகிறது.

எதனால் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் எமக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த கடையில் கமலக்கண்ணன் தொலைபேசியூடாக குறித்த உணவுக்கு ஓடர் கொடுத்துவிட்டு அதை எடுக்க போயிருந்த சமயம், அங்கு கடையில் வரிசையில் இருந்த ஒருவரைத் தாண்டி கமலக்கண்ணன் முன்னே சென்றதாலேயே இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே வந்த வாய்த்தர்க்கம் ஒரு உணர்ச்சிகரமான கோவத்தின் வெளிப்பாடே இவ் இறப்புக்கு காரணமாகியுள்ளதென தெரியவந்துள்ளது.

மேலும், கமலக்கண்ணனைத் தள்ளிவிட்டவரும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மோதல் சம்பவம் தொடர்பில் ரொரன்றோ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கமலக்கண்ணனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த கமலக்கண்ணன் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனபது குறிப்பிடத்தக்கது.