தயா மாஸ்டரைத் தாக்கிய முதியவர் நீதிமன்றால் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம திகத மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவரது கைகளில் வெட்டுக்கத்தி மற்றும் பொல்லு என்பன இருந்தன.
கலையகத்தின் வரவேற்பு அறைக்குள் நுழைந்த அவர் அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே.தயாநிதியைத் தாக்கினார்.
அடாவடியில் ஈடுபட்ட முதியவரைத் பிடித்த டான் நிறுவனப் பணியாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைகளின் பின்னர் முதியவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நீதிமன்றின் உத்தரவில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
முதியவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் இன்று செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 
முதியவர் இன்று மன்றில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரை 2 ஆள் பிணையில் விடுக்க உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை வரும் மார்ச் 20ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.