நாள் சம்பளம் பெறுவோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நாள் சம்பளம் பெறும் 19 இலட்சம் பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, முச்சக்கரவண்டி சாரதிகள், தச்சர்கள், அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனையாளர்கள், பூக்கடைக்காரர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நாள் சம்பளம் பெறுவோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அடுத்த வாரத்தில் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

தெரிவு செய்யப்பட்ட நாள் சம்பளம் பெறுவோர் தொடர்பான புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 19 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கிராம மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் குழுவொன்றின் பரிந்துரையின் பேரில் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயனாளிகள் தமது பிரிவிற்குட்பட்ட பிரதேச செயலகத்தினூடாக இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.