யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த பரிசீலனை

புது வருடத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சி, தீவகம் மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிற்கு மட்டுமே தளர்த்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண நிலவரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.

வடமாகாணத்தில் சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தக் கூடிய இடங்கள் தொடர்பில் படையினர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஊர் பெயர் விபரங்களை சமர்ப்பித்தனர்.

இதில் வடமராட்சியின் விபரத்தை கோரியபோது வடமராட்சியின் ஊரடங்கை தளர்த்த படைத்தரப்போ அல்லது சுகாதார அமைச்சோ இணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையிலேயே தென்மராட்சி , வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) ஆகியவற்றுடன் தீவகத்தின் ஊரடங்கினையும் தளர்த்த முடியும் எனவும் இருப்பினும் அவை அந்த பிரதேசத்தில் மட்டுமே நடமாட முடியும் தடை செய்யப்பட்ட பிரதேசங்களிற்குள் நுழைய முடியாது எனவும் முன்மொழியப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய பகுதிகள் தொடர்பில் அடுத்த வார இறுதியில் தாவடி , அரியாலை , மானிப்பாய் போன்ற தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலவரத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டதோடு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, முல்லைத்தீவின் துணுக்காய், பாண்டியன்குளம் ஆகியவற்றுடன் ஓட்டுசுட்டானின் ஒருபகுதி , வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி , செட்டிகுளம் ஆகிய இடங்களின் ஊரடங்கினையும் புதுவருடத்துடன் நீக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது..