முஸ்லிம்களுக்கு நான் தங்கத்தை கொட்டி கொடுத்தாலும் அவர்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தன்னிடம் கூறியதாக உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,
மகிந்த ராஜபக்ச சொன்னது 100 % உண்மையானது என்பதை முஸ்லிம் சமூகம் நிரூபித்து வருகிறது. அவர் அவ்வாறு சொன்னபோது நான் சொன்னேன் இல்லை.
இம்முறை நீங்கள் யுத்தத்தை முடித்து வைத்ததால் நிச்சயம் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்றேன். நடந்ததோ வேறு. கல்முனை, மூதூர் போன்ற முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் மஹிந்த தோற்கடிக்கப்பட்டார்.
அதன் பின் நான் மஹிந்தவை சந்திக்க சென்ற போது என் மீது மஹிந்த சீறிப்பாய்ந்தார். பெரிதாக சொன்னீர்கள் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று. கல்முனையில் கூட நான் தோற்றுள்ளேன். பொன்சேக்கா வென்றுள்ளார் என்றார்.
நான் சொன்னேன் உங்களுக்காக என்னால் முடிந்தளவு பிரச்சாரம் செய்தேன். எனது கடையை கூட எரிப்பதற்கு முன் வந்தனர் என்றேன். அத்துடன் முஸ்லிம் சமூகத்துள் செல்ல எமது கட்சிக்கு நீங்கள் எந்த வசதியும் செய்து கொடுக்கவும் இல்லையே என்றேன்.
என்ன கொடுத்தாலும் முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போடமாட்டார்கள் என்றார். இந்த வாத பிரதிவாதம் காரணமாக மஹிந்தவுடன் சண்டை பிடித்துக்கொண்டு சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிடாமல் வெளியேறினேன்.
பின்னர் நான் சிந்தித்த போது மஹிந்த ஆத்திரப்படுவதில் நியாயம் உண்டு என புரிந்தது. அதன் பின் நான் மஹிந்தவை சந்திக்க செல்வதை தவிர்த்தேன்.
2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோற்ற பின்னரே மஹிந்தவின் அழைப்பை ஏற்று மீண்டும் நேரடியாக சந்தித்தேன்.
இந்த நிலைதான் முஸ்லிம் மக்களிடம் தொடர்ந்தது. 60 லட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள மக்கள் விரும்பும் ஒரு தேசிய தலைவரை முஸ்லிம் மக்கள் வெறுத்து ஒதுக்கிக்கொண்டு தமக்கு நல்லதும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் இது சாத்தியமா?
பண்டாரநாயக்கவுக்கு எந்த முஸ்லிம் தலைவரும் ஆதரவளிக்காத போது தலைவர் பதியுதீன் மஹ்மூத் ஆதரவளித்தார். முஸ்லிம் சமூகம் அவரை தூற்றித்தள்ளியது.
ஆனாலும் பண்டாரநாயக்க பதியுதீனுக்கு கல்வி அமைச்சை கொடுத்து மிகப்பெரும் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி காட்டினார்.
ஆனாலும் அந்த பதியூதீனுக்கும் முஸ்லிம் சமூகம் ஓட்டு போடாமல் தோற்கடித்து காட்டியது. அதே போல் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் ஓட்டு இல்லாத அலவி மௌலானாவையும், அஸ்வர் ஹாஜியையும் பெரிதும் கௌரவித்தார்.
முன்னாள் அமைச்சர் அஷ்ரப் கூட அலவி மௌலானாவின் துணையுடன்தான் சந்திரிக்காவிடம் சிலதை சாதித்தார். முஸ்லிம் சமூகம் இனியும் சிந்திக்க வேண்டும்.
யார் சிங்கள மக்களிடத்தில் அதிக செல்வாக்குள்ளவராக இருக்கிறாரோ அவருடனும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களையும் பகிரங்கமாக ஆதரிக்க முன் வர வேண்டும். அப்போதுதான் அவருடன் இருக்கும் முஸ்லிம்களால் ஏதாவது சாதிக்க முடியும்.
இல்லாமல் மஹிந்த சொல்வது போல் முஸ்லிம்களுக்கு என்ன நன்மை செய்தாலும் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதையே தொடர்ந்தும் நாம் நிரூபித்துக் கொண்டிருந்தால் நாம் இன்னுமின்னும் மிக மோசமான எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயலை சந்திக்கத்தான் வேண்டி வரும். அதனால் எமது செயலை மாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.