மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (9) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களுடைய சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கட்டையடம்பன் பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் மன்னார் பதில் நீதவானினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து அக்கிராம மக்களும் குடும்ப உறவுகளும் ஆதங்கம் தெரிவித்துள்ளர்.
நேற்று முன் தினம் வியாழக்கிழமை மாலை மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டல் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு சகோதரிகளும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு பெண்களின் இறுதி கிரிகைகள் நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை 5 மணியளவில் கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் இடம் பெற்று பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எனினும் குறித்த இரு சகோதரிகளின் இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்வதற்கு முன் விபத்தை ஏற்படுத்திய குறித்த நபரை மன்னார் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது..
மன்னார் நீதி மன்ற பதில் நீதவான் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மத குரு ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் இணைந்து குறித்த நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும் குறித்த பிணை வழங்குவது தொடர்பாக மன்னார் பிரந்திய பொலிஸ் மற்றும் பொறுப்பதிகாரி கடும் எதிர்பு தெரிவித்திருந்தனர்.
எனினும் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது குறித்த நபருக்கு பதில் நீதவான் பிணை வழங்கி உள்ளார்.
குறித்த இரு சகோதரிகளின் இறுதிக் கிரிகைகள் இடம் பெறுவதற்கு முன்னதாகவே விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பொலிஸாரின் கடும் எதிர்ப்பை மீறியும் மதகுரு ஒருவரின் ஆதரவுடன் பிணை வழங்கப்பட்டமையால் இறந்த பெண்களின் குடும்பத்தினர் பல்வேறு விதமான எதிர்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
மேலும் உயிரிழந்த குறித்த இரு பெண்களும் அரச ஊழியர்களாக உள்ள போதும் அவர்களின் மரணத்திற்கு ஆரம்பத்திலேயே நீதி கிடைக்கவில்லை என குடும்ப உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.






