நயினாதீவு கடலில் குருநகர் மீனவர்கள் மாயம்!! தேடும் பணிகள் தீவிரம்!!

யாழ். குருநகரிலிருந்து கடந்த புதன்கிழமை(24) கடற்தொழிலுக்குச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
கடந்த புதன்கிழமை இரவு கடற்தொழிலுக்குச் சென்ற மேற்படி மீனவர்கள் மூவரும் மறுநாள் வியாழக்கிழமை தமது படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் நயினாதீவுக் கடற்பரப்பிலிருப்பதாக உறவினர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சக தொழிலாளர்கள் நயினாதீவுக் கடலுக்குச் சென்று குறித்த மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட போதும் அவர்களைக் காண முடியவில்லை. இந்நிலையில் கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, மீனவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.