முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றதுடன் அதில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இன்றைய இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அதிக பட்சமாக உபுல் தரங்க 56 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரொபெல் ஹுஸைன் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதன்படி இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற வேண்டுமாயின் 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.