ஹட்டன் – அபோட்சிலி தோட்டத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபோட்சிலி தோட்டத்தில் மாணவன் ஒருவன் நேற்று(வியாழக்கிழமை) மாலை தூக்கிட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் பிரசாந்குமார்(வயது 14) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் அரசியல் பிரதிநிதி ஒருவரால் பாடசாலை மாணவனொருவன் களவாடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தகவலையடுத்து ஹட்டன் பொலிஸார் அந்த மாணவனை விசாரித்த போது அம்மாணவன் மேலும் சில சகாக்களை பொலிஸாரிடம் காட்டிக்கொடுத்துள்ளார். அந்த மாணவனால் காட்டப்பட்ட சகாக்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும், காட்டிக்கொடுத்த மாணவன் மீது மற்றைய சகாக்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் இருந்த சிலரும் தகாத வார்த்தைகளால் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவன் வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவன் அணிந்திருந்த ஆடையிலிருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவனின் சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.