தூண்டிலில் சிக்கிய மீனை விழுங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர்.. இறுதியில் கதறிதுடித்து உயிரிழந்த பரிதாபம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபர் ஒருவர் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் விழுங்குவது போல் செல்பி எடுக்க முயற்சித்தபோது, மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது செல்பி மோகத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதுபோன்றதொரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் மேல் அருங்குணம் கீரிமலை தென்புற வீதியை சோ்ந்தவா் அரிகண்டன் (17). வெல்டிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் பொழுதைக் கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அருகே இருந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற அரிகண்டன், அங்கு தூண்டிலில் சிக்கிய மீனை உயிருடன் விழுங்குவது போன்று செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது வாயில் உயிருடன் துடித்தபடி இருந்த அந்த மீன், நழுவி அவரது தொண்டைப் பகுதிக்குச் சென்று சிக்கியுள்ளது.

பின்பு அலறித்துடித்த அரிகண்டனை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து, தொண்டையில் சிக்கிய மீனை மருத்துவர்கள் அகற்றியும், மூச்சுத்திணறல் காரணமாக அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

செல்பி மோகத்தினால் இளைஞர் இவ்வாறு உயிரைவிட்டதால் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.