யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

நாளைமறுதினம் (ஏப்ரல் 20) திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொலிஸ் மட்டத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில காவல்துறை பிரிவுகள் தவிர்ந்த ஏனைய காவல்துறை பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிரேன்பாஸ், பம்பலபிட்டி, வாழைத் தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் கொஹூவளை காவல்துறை பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில மற்றும் வென்னப்புவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.