யாழ் மாவட்ட அரச அதிபர் பகிரங்க சவால்

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின் போது தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

கூட்டம் நிறைவடைந்ததும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அரசாங்க அதிபர் பதில் வழங்கியிருந்தார்.

சகல துறை சார் விடயங்கள் தொடர்பிலும் குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் கொடையாளர்களால் வழங்கப்பட்ட உணவுப் பொதியை அரசாங்க அதிபர் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் உரிய விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்மாவட்டத்தில் தங்கி உள்ளவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நான்கு மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதிகளை பெற்று இன்று காலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.