பதுளை தமிழ் அதிபருக்கு நீதிகோரி தலைநகரில் ஆர்ப்பாட்டம்!

அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தமைக்காக அரசியல்வாதியின் முன் மண்டியிட நிர்ப்பந்திக்கப்பட்ட பதுளை தமிழ் பாடசாலையின் அதிபருக்கு நீதிகோரி தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு ஆமர் வீதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்விச்சேவையில் கடமையாற்றும் அதிபருக்கு அரசியல் அதிகாரம் படைத்தவர்களாலும், அதற்கு துணையான சில நிர்வாகிகளாலும் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு போராட வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த அதிபரை குறித்த அரசியல்வாதி தன் வீட்டுக்கு அழைத்து தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்துள்ளதுடன், அதனை வெளியில் கூற வேண்டாம் என அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

இவ்வாறு உயிருக்கு அஞ்சி வாய்மூடியிருந்த குறித்த அதிபர், இவ்வாறான அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களை தட்டிக்கேட்கும் வகையில் முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.